இந்தியா
திருப்பதி கோவிலில் இலவச தரிசன அனுமதி எப்போது? தேவஸ்தானம் பதில்!
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள், கோவில்கள் மூடப்பட்டன என்பதும் கடந்த சில வாரங்களாக தான் ஒரு சில நிபந்தனைகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் திருப்பதி கோயிலில் தற்போது கட்டண தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விரைவில் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போதைக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் செயல் அதிகாரி ஜவஹர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் பக்தர்கள் ஓய்வு அறை பெற திருமலையில் 6 இடங்களில் புதிய கவுண்டர்களை அமைத்து உள்ளோம் என்று கூறிய ஜவகர் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஒரு நேரடியாக விசாரணை அலுவலகத்திற்கு சென்று அறைகளை பெறலாம் என்று கூறியுள்ளார். திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு இப்போதைக்கு அனுமதி இல்லை என்ற தகவல் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.