தமிழ்நாடு
சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கலெக்டரின் அறிவிப்பால் பக்தர்கள் அதிருப்தி!
சபரிமலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. அதன்படி கடந்த சில நாட்களாக பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பம்பை ஆற்றின் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யா என்பவர் தடை விதித்துள்ளார்.
கேரள மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பில் வெளியாகியுள்ளது.
மழை வெள்ளம் குறைந்த பிறகு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடீரென அனுமதி மறுக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.