தமிழ்நாடு
கோவில் நகைகளை உருக்கக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு!
கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் தமிழக அரசு எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அறநிலை துறை அமைச்சகம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்பதும், குறிப்பாக தமிழில் அர்ச்சனை உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கோவில்களில் சாமி சிலைக்கு அணிவிப்பது போக மீதமுள்ள நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் வைத்து அந்த பணத்தின் மூலம் கல்லூரிகள் மற்றும் பிற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் கோவில் நகைகளை உருகுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பதும் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் தமிழக அரசு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறங்காவலர் நியமனத்திற்கு பிறகு கோயில் நகைகள் உருக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.