வணிகம்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்களின் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ரெப்போ வட்டி விகிதம் தற்போது உள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி இப்போதைக்கு அதிகரிக்காது எனத் தெரிகிறது. ஏனென்றால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டியை உயர்த்தும்.
கடந்த நிதியாண்டில் வெவ்வேறு காலங்களில் படிப்படியாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை என்பது வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
வளர்ந்த நாடுகளில் வங்கித் துறையில் இருக்கும் சூழலைக் கவனித்து வருவதாகவும், உரிமை கோரப்படாத டெபாசிட்களை தேட ரிசர்வ் வங்கி மையப்படுத்தப்பட்ட போர்ட்டலை அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.