தமிழ்நாடு
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் ஓட்டு விழுந்ததா? புகார் அளித்தவர் மீது நடவடிக்கை!
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழுகிறது என்றும் எந்த பட்டனை அமுக்கினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு விழுகிறது என்றும் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக விருதுநகரில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் வாக்களித்த ஒருவர் தான் 1வது பட்டனை அழுத்திய போது இரண்டாவது பட்டனுக்கு ஓட்டு விழுந்ததாக சொன்னதால் ஓட்டுச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தலை நிறுத்துமாறு தேர்தல் அதிகாரியிடம் கூற உடனடியாக தேர்தல் அதிகாரி மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்தார். இதனை அடுத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு பட்டன் மாறி வாக்களித்ததாக புகார் அளித்து நபரை மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்த சொன்னார். அப்போது அவர் 1வது பட்டனை அழுத்திய போது 1வது பட்டனில் தான் வாக்குப்பதிவு ஆனது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் பொய்யான புகார் கூறிய கூறி வதந்தியை பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒரு நபரின் பொய்யான தகவல் காரணமாக அந்த வாக்குச் சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்றுதான் ஒரு சில தொகுதிகளில் சின்னம் மாறி வாக்கு விழுந்ததாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்றும் அப்படி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.