தமிழ்நாடு
கடலூரில் அமமுக சின்னத்திற்கு பட்டன் இல்லை: வாக்குப் பதிவு நிறுத்தம்!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்தவாறு உள்ளது.
வாக்குப்பதிவு செய்யும் மின்னனு இயந்திரம் பழுது பல வாக்குச்சாவடிகளில் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றுகிறார்கள். மேலும் பல பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் அஜின் என்பவரது ஓட்டை வேறு யாறோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் கடலூர் தொகுதியில் அமமுக வேட்பாளரின் சின்னத்துக்கு பட்டன் இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மக்களவைத் தொகுதியின் திருவதிகை வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் காசி.தங்கவேல் பெயருக்கு நேரே வாக்குப் பதிவு பட்டனே இல்லை. இதனால் வாக்குப்பதிவு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஏன் இதுபோன்ற தவறுகளை செய்கிறது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.