இந்தியா
மருத்துவமனையில் படுக்கையில்லை: ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!
மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சில் பரிதாபமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை சேர்த்துக்கொள்ள தனியார் மருத்துவமனை மறுத்துவிட்டதாக தெரிகிறது.
மேலும் குழந்தைக்கு கொரோனா இருக்குமா என்ற சந்தேகத்தையும் தனியார் மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை இல்லை என்றும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாகும் வரை சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மணிநேரம் படுக்கை காலியாகும் என்று குழந்தையை கையில் வைத்து கொண்டு அதன் பெற்றோர் ஆம்புலன்ஸில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென ஆம்புலன்ஸில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவமனை முன் பல மணி நேரம் காத்திருந்த அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது. மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இல்லாததால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.