இந்தியா
காங்கிரஸ் என்னை கணக்குப்பிள்ளை போல நடத்தியது; இனிமேல் கூட்டணி கிடையாது: குமாரசாமி அதிரடி!
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் முதல்வராக மஜதவின் குமாரசாமி இருந்து வந்தார். ஆனால் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பா முதல்வராக உள்ளார். இந்நிலையில் குமாரசாமி இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
தி இந்து ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த குமாரசாமி, 14 மாத கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் என்னை முதல்வராகவே பார்க்கவில்லை. என்னை ஒரு கணக்குப் பிள்ளை போல நடத்தினார்கள். எத்தனை நாளைக்குத்தான் அடிமையாகவே இருப்பது? முன்னாள் முதல்வரான சித்தராமையா 29 மூத்த அதிகாரிகளை அவரது விருப்பப்படியே நியமித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அவர்களது விருப்பப்படியே அவரவர் துறைகளுக்கு அதிகாரிகளை பெற்றுக்கொண்டனர். ஆனாலும் காங்கிரஸ் இடையூறு கொடுத்துக் கொண்டே இருந்தது.
சித்தராமையா மஜத கட்சியை பாஜகவை விடபெரிய எதிரியாகவே பார்க்கிறார். இதுகுறித்து அவரோடு நான் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். என்னை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு சித்தராமையா மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிந்தே இருந்தேன். அவர் எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்தார்.
இப்போதைய அரசியல் நிலவரப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வரலாம் என்பதை என்பதை விட ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் பொதுத்தேர்தல் வரலாம். அப்படி வந்தால் நாங்கள் காங்கிரசோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க மாட்டோம் என்றார் அதிரடியாக.