கிரிக்கெட்

இந்தியா 92 ரன்னில் ஆல் அவுட்: நியூசிலாந்து அபார வெற்றி!

Published

on

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இதில் கேப்டன் கோலி, தோனி மற்றும் முகாமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இதில் ரோஹித் ஷர்மாவுக்கு 200-வது ஒருநாள் போட்டி ஆகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஏமாற்றம் அளிக்க வரிசையாக ஒட்டுமொத்த அணியும் சொற்ப ரன்னில் வெளியேறியது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி நிலைகுலைய வைத்தார்.

இந்திய அணியில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா 7, தவான் 13, ஷுப்மன் கில் 9, ராயுடு 0, தினேஷ் கார்த்திக் 0, ஜாதவ் 1, பாண்டியா 16, புவனேஸ்வார் குமார் 1, குல்தீப் யாதவ் 15, அஹமது 5 ரன் என வரிசையாக பெவிலியன் திரும்பினர். சாஹல் மட்டும் 18 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் டெய்லர் 37 ரன்களையும், நிக்கோல்ஸ் 30 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலைய செய்த ட்ரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

seithichurul

Trending

Exit mobile version