உலகம்
40 வருடங்களுக்கு பின் வேலைநிறுத்தம்.. ஸ்தம்பித்த பிரபல ஊடகம்!
40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்த ஊடகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூயார்க் டைம்ஸ் ஊழியர்களில் 1,100 பேர் இன்று திடீரென வேலை நிறுத்தம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்த ஊடகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊதிய உயர்வு, உடல்நல காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக கூறப்படுகிறது.
ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாளைய நியூயார்க் டைம்ஸ் பதிப்பு வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போராட்டம் செய்யும் தொழிலாளர்கள் கூறியபோது நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் செய்திகளை படியுங்கள் என்றும், வானொலி கேட்டுக்கொண்டே சமையல் புத்தகத்தில் இருந்து ஏதாவது சமையல் செய்யுங்கள் என்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள் மட்டும் நிர்வாகத்திற்கு இடையே ஊதிய உயர்வு, உடல்நல காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியுள்ளதால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
40 ஆண்டுகளுக்கு பிறகு உலகின் முன்னணி ஊடகம் ஒன்றில் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.