தமிழ்நாடு
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை மையம் தகவல்!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் வங்கக் கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்பதும் அவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் கனமழையை கொடுத்தது என்பதையும் பார்த்தோம்.
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் சேதம் உண்டாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்து மழை ஓரளவு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.