தமிழ்நாடு
புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்: ரூ.20 லட்சம் வரை செலவு செய்யலாம்!
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021-ன்படி, மாநில அரசு நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூ.20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என்றும் தமிழக அரசின் நிதித்துறை கொள்கை விளக்க குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு நிதி மூலதனம் மூலம் 20 லட்ச ரூபாய் மூலம் அரசு ஊழியர்கள் மருத்துவ உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், மாநில நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற முடியும்.
மேலும் இந்த திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்கள் ரூபாய் 300 செலுத்த வேண்டும் என்றும் இதன் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு ஏற்பட்டால் நிதி மூலதனம் மூலம் 20 லட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி கதிரியக்க சிகிச்சை உள்ளிட்ட பல நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு மருத்துவ உதவி பெற 10 லட்சம் வரை உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.