தமிழ்நாடு
மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்பதற்கு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை உருவானது!
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, இன்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது. மு.க.ஸ்டாலின், இன்று முதல் முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கு உரிமை கோரியது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்து முடிந்தது.
தேர்தலுக்கு முன்னர், மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்க்கும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் பிரச்சாரப் பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது மக்களின் புகார்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்க்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதற்கு ஏற்ப தற்போது புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய துறைக்கு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் இந்த துறைக்கான அலுவலகம் இருக்கும்.
இந்தத் துறைக்கு ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார்.