இந்தியா
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் எத்தனை பேர் பாதிப்பு?- எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப் புதிய வகை உருமாறிய கொரோனா இருப்பது சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த இந்த உருமாறிய கொரோனா தொற்று, தற்போது நிலவரப்படி நாட்டில் 71 பேருக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த உருமாறிய கொரோனா தொற்றானது, முன்பு வந்த கொரோனாவைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த தொற்றைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அரசு, அந்நாட்டில் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை முழு லாக்டவுன் உத்தரவை அமல் செய்துள்ளது.
இப்படி நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட விவகாரம் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.