இந்தியா

புதுவகை கொரோனாவால் பீதி: மீண்டும் ஜனவரி வரை ஊடரங்கு அமல்!

Published

on

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்குத் தற்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கிலாந்திலிருந்து சமீப நாட்களாக விமானம் மூலம் வந்தவர்கள் அனைவரைக்கும் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், அனைத்து நகரங்களிலும் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. உத்தரவு குறித்து வெளியிட்ட அறிவிக்கைப்படி, வரும் ஜனவரி வரை மகாரஷ்டிராவில் உள்ள அனைத்து நகரங்களிலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவிக்கும் போது, ‘புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது. வரும் 15 நாட்களுக்கு நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

அவர் மேலும், ‘கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியையும் மதித்து நடக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version