சினிமா
திடீரென்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பும் ரஜினி!?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட, அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அண்ணாத்த ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காரணத்தால், படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்னர் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, அண்ணாத்த படத்தில் துணை நடிகர்கள் வரும் காட்சிகளை படமாக்கி வந்தார் சிவா. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததால், சில வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்க ரஜினி சென்றார். தனி விமானம் மூலம் அவர் சென்னையிலிருந்து ஐதரபாத் சென்று, அங்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பில் கலந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது புது வகை கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. இது முன்பு வந்ததைவிட வீரியமான வைரஸ் தொற்று என்று சொல்லப்படுகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி, கொரோனா அச்சம் காரணமாக ரஜினி, அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து விலகியுள்ளதாகவும், விரைவில் அவர் சென்னை வந்துவிடுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.