இந்தியா
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மோட்டார் வாகன சட்டம்… விதிகளை மீறினால் அபராதம் எவ்வளவு?
மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தங்கள் 2019 செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முன்பு இருந்ததை விட பல மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை உயர்த்தியுள்ளதால் சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாகச் செயல்படுவார்கள்,. விபத்துகள் குறையும் என்று கூறப்படுகிறது.
எனவே இன்று முதல் சாலைகளில் வாகனம் ஓட்டி செல்லும் போது விதிமுறைகளை மீறும் போது எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
அரசு பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களை உரிமம் இல்லாமல் ஓட்டும் போது 5000 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இதற்கான அபராதம் 500 ரூபாயாக இருந்தது.
நிர்ணைக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போது சொந்த தனிநபர் பயன்பாட்டு வாகனம் எனில் 1000 ரூபாயும், நடுத்தர பயணிகள் அல்லது சரக்கு வாகனம் எனில் 4000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினில் 6 மாதங்கள் முதல், 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறை அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டுபவர்கள் மன ரீதியாக அல்லது உடல் ரீதியாகத் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை என்றால் 2000 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் சிரை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை விபத்து ஏற்படுத்தினால் 1 வருடம் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் 4000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் சிறை, 12 மாதங்களை வரை வாகனம் பதிவு ரத்து செய்யப்படும். சிறார் என்றால் 25 வரை எல்.எல் ஓட்டுனர் உரிமம் கூட வாங்க முடியாது.
ஆன்லைனில் எல்.எல் விண்ணப்பித்து இருந்தால் விண்ணப்பத்தை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் சமர்ப்பித்து ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.