தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி மீது புது வழக்குப் போட்ட போலீஸ்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, தமிழக காவல் துறை 5 பிரிவுகளின் கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.
நேற்று தமிழகத்தில் ஆட்சி புரிந்து வரும் திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டத்தை அதிமுக மாநிலம் தழுவிய அளவில் நடத்தியது.
இதில் தமிழக சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெளியில் சுமார் 200 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்துக்கு போலீஸிடம் முறைப்படி அனுமதி வாங்கவில்லை, கொரோனா ஊரடங்கு மீறியது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலத்தில் நேற்று சுமார் 19 இடங்களில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் அனுமதி வாங்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி, சுமார் 1,500 அதிமுகவினர் மீது நேற்று தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.