இந்தியா
புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி!
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து புதிய 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில் புதிய 20 ரூபாய் நோட்டுகளும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.