தமிழ்நாடு
நெல்லை அமமுக, சமக வேட்புமனுக்கள் டிஸ்மிஸ்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி
நெல்லை தொகுதியின் அமமுக மற்றும் சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் ஆனதை அடுத்து அந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று காலை 11 மணிமுதல் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பால்கண்ணனின் வேட்பு மனுவை பரிசீலனை செய்தபோது அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் 3 பேர் அந்த தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சியின் சமத்துவ மக்கள் முன்னேற்ற் கழகத்தின் வேட்பாளர் அழகேசன் என்பவரின் வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அவர் 10 நபர்களை முன்மொழிவு செய்வதற்கு பதிலாக 8 நபர்களை மட்டுமே முன்மொழிந்தார் என்பதால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அமமுக வேட்பாளர் பால் கண்ணன் தேவர் சமுதாய ஓட்டையும், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் நாடார் சமுதாய ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற நிலையில் அவர்கள் இருவரது வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் தற்போது நயினார் நாகேந்திரன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.