இந்தியா
‘நீட்’ தேர்வை தள்ளி வைத்தது மத்திய அரசு
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது நாட்டில் நிலவும் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், முதுநிலை நீட் தேர்வு – 2021 தள்ளி வைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடத்தப்படுவதாக முடிவெடுக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறித்து கள நிலவரத்தைப் பொறுத்து எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்வு நடத்துவதற்கு முன்னர் அது குறித்து தெரியப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்குக் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். ஒருவேளை சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையைக் கணக்கிட புதிய முறையை விரைவில் சிபிஎஸ்இ வாரியம் வெளியிடும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால் தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.