இந்தியா

ஆள்மாறாட்டம், பல லட்சம் கைமாறல்: நீட் தேர்வில் நூதன மோசடி!

Published

on

சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் டெல்லி மற்றும் மற்றும் ராஞ்சியில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மிகப் பெரிய மோசடி செய்யப்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை கண்டுபிடித்து அதிகாரிகள் அதற்கு மூளையாக செயல்பட்ட நாக்பூர் தனியார் பயிற்சி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையம் இந்த முறைகேடுகளுக்கு பிறப்பிடமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த மையத்தின் உரிமையாளர் இந்தியாவில் உள்ள புகழ்ப்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் தலா 50 லட்ச ரூபாய் பெற்றதை சிபிஐ அம்பலப்படுத்தியுள்ளது.

அத்துடன் நீட் தேர்வுக்கான விடைகளை முன்கூட்டியே தருவதாகவும், விடைத்தாள்கள் எந்த மையத்தில் இருந்தாலும் அந்த மையத்தில் வைத்து அதை திருத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறி பயிற்சி நீட் தேர்வு மைய உரிமையாளர் பல லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ள மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோரையும் சந்தித்து ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய் வசூலித்த அந்த நீட் பயிற்சி நிலைய உரிமையாளர், பணத்தை ரொக்கமாக வாங்காமல் பல மாதங்கள் முன் தேதியிட்டு காசோலையாக வாங்கிக்கொள்வார் என்றும், அதற்கு இணையாக மாணவரின் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்வார் என்றும், பணம் கைக்கு வந்தவுடன் அவற்றை திரும்ப கொடுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வெழுதும் மாணவர்களின் அடையாள அட்டையில் மாற்றம் செய்த பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் அவரது சகாக்கள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட தேர்வு மையங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் கச்சிதமாக திட்டத்தை தீட்டியது உறுதியாகியுள்ளது. மாணவர்களிடமிருந்து மெய்நிகர் ஆதார் அட்டை பெற்று போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. பணம் கொடுத்த மாணவர்களின் புகைப்படங்களை மிக்ஸிங் மற்றும் மார்பிங் செய்து அவர்களைப் போன்றே உள்ள ஏற்கனவே நீட் தேர்வில் வென்றவர்களுக்கு பெரும் தொகை கொடுத்து நியமித்தனர்.

கடந்த 9ஆம் தேதி டெல்லி சென்று அங்கு ஆள்மாறாட்ட தேர்வு நாடகத்தை கனகச்சிதமாக நடத்தியதும் பின்னர் தேர்வு முடிந்து அங்கிருந்து ரயிலில் நாக்பூர் திரும்பியதும் உறுதியாகி உள்ளது. அதன்படி டெல்லியில் 5 மாணவர்களை சிபிஐ தங்களது விசாரணை வளையத்தில் கொண்டு வந்துளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வில் மோசடி செய்தவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்கத்தில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில் மராட்டிய பயிற்சி மையம் ஒன்று நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version