தமிழ்நாடு
நீட் விலக்கே திமுகவின் நிலைப்பாடு: அமைச்சர் திட்டவட்டம்
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிபட கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு விலக்கு பெற்றுத் தரப்படும் என்று திமுக அரசு கூறி வந்தாலும், நீட் தேர்வுக்கு அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளும் இயங்கும் எனக் கூறியுள்ளது. இதனால் நீட் நடைபெறுமா, நடைபெறாதா என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையநில் இது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘ஆகஸ்ட் 20 என்பது மிகக் குறுகிய காலமாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்திற்குள் நீட் ரத்து என்பது மிகக் கடினமான விஷயம். அதற்கு எந்தெந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.