தமிழ்நாடு
11 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் தகவல்!
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கனவாக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது.
கடந்த ஆண்டு இந்த இட ஒதுக்கீடு அறிவிப்பின் காரணமாக 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து தற்போது எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் கடந்த 10 ஆண்டுகளில் அரசு பள்ளியில் படித்த 190 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்த நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 400க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த 22,131 பேர் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 15,660 அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர் என்றும், இவர்களில் 11 ஆயிரம் பேருக்கு கண்டிப்பாக பொறியியல் படிப்புக்கு இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இருந்தால் மட்டுமே 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வரலாற்றில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கு சீட் கிடைக்க உள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.