தமிழ்நாடு
ஆயுதபூஜை தினத்தில் மைல்கல்லுக்கு பூஜை செய்த சாலைப்பணியாளர்கள்!
வேதாரண்யத்தில் ஆயுதபூஜை பெருநாளை முன்னிட்டு தங்கள் தெய்வமாக மதிக்கும் சாலைகளுக்கு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பூஜை செய்து வழிபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆயுத பூஜை என்றால் வழக்கமாக பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடுவார்கள். ஆனால் வேதாரண்யத்தில் உள்ள தகட்டுர் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வித்தியாசமான முறையில் வழிபாட்டை நிகழ்த்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பகுதியில் சாலை பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடினார்கள். அப்போது சாலையோரத்தில் உள்ள மைல்கல்லை குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் வைத்து மாலை அணிவித்து வாழைமரம் கட்டி தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களை வைத்து படையலிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
ஆயுத பூஜை தினத்தன்று ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடும் நிலையில் சாலைப் பணியாளர்கள் தாங்கள் ஆண்டு முழுவதும் சாலையில் வேலை செய்வதால் தாங்கள் தெய்வமாக நினைக்கும் மைல் கல்களுக்கு ஆயுத பூஜை வழிபாடு நடத்தியுள்ளனர். வித்தியாசமான இந்த வழிபாடு அப்பகுதி மக்களையும் வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்தது.