கிரிக்கெட்
3வது டெஸ்டில் களமிறங்குகிறார் நடராஜன்!
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது டெஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் களமிறங்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பழி தீர்த்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ‘ஹிட் மேன்’ ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஓப்பனரான டேவிட் வார்னர், காயத்திலிருந்து மீண்டு வந்து களமிறங்குகிறார்.
இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், அடுத்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் இரு அணிகளும் தலா ஒரு தொடரைக் கைப்பற்றியுள்ளன. இதற்கு முன்னர் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் களமிறங்கிய நடராஜன், தன் பவுலிங் திறமையால் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார். தற்போது டெஸ்டிலும் நடராஜன் கலக்குவதற்கான நேரம் வந்துவிட்டது.