செய்திகள்
பழனிக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்ட தமிழக வீரர் நடராஜன்…
ஆஸ்திரேலியா தொடர் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்
கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான வீரர்கள் வரிசையில் தமிழக வீரர் நடராஜனை நெட் பவுலிங் செய்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து ஆஸ்திரேலியா அனுப்பியது.
ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொண்ட நடராஜன் வெறும் நெட் பவுலராகவே ஆஸ்திரேலியா சென்றார்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பங்கேற்ற பல இந்திய வீரர்கள் காயம் காரணமாக விலகியதில் ஆடும் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஐபிஎல்லை விட ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டார் நடராஜன். இந்திய தரப்பில் மட்டுமல்ல உலகளவில் கவனம் பெற்றார் நடராஜன்.
ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என ஒரே சுற்றுப்பயணத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் ஒரே தொடரில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார் நடராஜன்.
டி20, டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதும் இந்திய கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரஹானே வெற்றிக் கோப்பைகளை நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தனர்.
ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெற்றியுடன் திரும்பியுள்ள நடராஜன் தற்போது பழனி முருகன் கோயிலில் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் நடராஜன் ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது