தமிழ்நாடு
பாஜகவின் அடிமையாக பேய் கழகமாக உள்ளது அதிமுக: நாஞ்சில் சம்பத் அதிரடி!
அமமுக பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், அதிமுகவை பாஜக இயக்குவதால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணையவில்லை. அமமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு வருவார்கள். தேனியில் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பதிடம் அமமுகவில் இருந்து வருபவர்களை வரவேற்று ஆர்வத்துடன் திமுக சேர்த்துக்கொள்வது புரியவில்லை. அமமுகவை ஒழிக்கலாம், அழிக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது புரியவில்லை என்கிறாரே புகழேந்தி என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், அவருடைய உள்ளத்தில் இருப்பது ஒன்று. உதட்டில் இருப்பது ஒன்று. அவரும் அங்கே இருக்க முடியாது. இயங்க முடியாது. அவரும் வெளியேறிவிடுவார். அமமுகவில் இருப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர்கள். அமமுக தலைமை பிடிக்கவில்லை என்றால் அதிமுக செல்லாமல், திமுகவுக்கு ஏன் வருகிறார்கள். அதிமுக தற்போது தாய் கழகமாக இல்லை. பிஜேபி என்கிற கட்சியின் அடிமையாக பேய் கழகமாக மாறி வருகிறது. அதனால் அங்கு செல்ல விரும்பாமல் திமுகவுக்கு வருகின்றனர் என்றார்.