தமிழ்நாடு
சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடி கைது!
![Nandhini - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Nandhini.jpg)
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த சவுமியா என்ற மாணவியை கடந்த 6-ஆம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள போராடிய சவுமியாவை அந்த காமுகர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க தனது மகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார் சவுமியாவின் தந்தை. அவர்கள் உடனடியாக புகார் பெற்றுக்கொண்டு மாணவி சவுமியாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்க மருத்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்ட பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்தனர். அப்போதும் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு நாட்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இரண்டு தினங்கள் கழித்து சிறுமியின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இதனை கண்டித்து தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் போராட்டம் நடத்தினார். தருமபுரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரி இருவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.