தமிழ்நாடு
திருவாளர் துண்டுச்சீட்டு: ஸ்டாலினை விளாசிய அதிமுக நாளேடு!
தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா புறவழி முயற்சிகளை புறமுதுகு ஓட்டுவோம் என்ற தலைப்பில் பதிலடி கொடுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து அதிமுக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த ஆட்சியை கவிழ்க்க திமுக ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அடுத்த தேர்தல் வந்துதான் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உண்டு என சென்னையில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்துள்ள அதிமுகவின் நமது அம்மா நாளேடு, தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி மாற்றம் நடத்துவாராம் திருவாளர் துண்டுச்சீட்டு. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும். எப்போதாவது தோல்வி அடைபவரிடம் விழிப்புணர்வு பெருகும் என்பார்கள். அதுபோல, இன்றைய கோபத்தில் நேற்றைய கொடுமைகளை மறந்து விடும் தமிழ் மக்கள், உணர்ச்சி வயத்தால் தந்த விபத்து வெற்றியை திமுக தலைவர் ஏதோ தனக்கு தமிழக மக்கள் விரும்பி சூட்டிய மகுடம் என்று கருதிக் கொண்டு அளவு கடந்த மமதையை கொப்பளிக்கிறார்.
அதனால் தான் 123 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு கம்பீர பெரும்பான்மையோடு வெற்றி நடைபோடும் எங்கள் அரசை ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு மாறாகக் கவிழ்ப்பேன் என்றும், தேர்தல் இல்லாமலேயே புறவழியில் ஆட்சி மாற்றம் நடத்துவோம் என்றும் கூறுகிறார்கள் என விமர்சித்துள்ளது.