தமிழ்நாடு

‘பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துகளை அழித்தால் எதிர்விளைவுகளை சந்திக்கணும்’- சீமான் எச்சரிக்கை

Published

on

கர்நாடகா- தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தளவாடி பகுதியில் கர்நாடகா- தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை சிலர் தமிழக எல்லைக்குள் வந்து அழித்துள்ளனர். கன்னட சலுவாலியா சங்கத்தைச் சேர்ந்த வட்டாள் நாகராஜ் தலைமையிலான குழுவினர் வந்து பலகைகளை சேதப்படுத்தி, வெள்ளை பெயின்ட் அடித்து எழுத்துக்களை அழித்து, தமிழில் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், “தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளைச் சேதப்படுத்துவதையும், தமிழெழுத்துக்களை அழிப்பதையும் தமிழகக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைதுசெய்யாது விட்டது தமிழக அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது.

சனநாயகத்தையும், மாண்பையும் பற்றி தமிழர்களுக்குப் பாடமெடுக்கிற பெருமக்கள் யாவரும் இத்தகைய அத்துமீறல் போக்குகளைக் கண்டிக்காது கனத்த மௌனம் சாதிப்பதன் அரசியலென்ன? இதேபோன்றதொரு வஞ்சகம் நிறைந்த கொடுஞ்செயலை தமிழர்கள் எவராவது கர்நாடகா எல்லைக்குள் சென்று செய்திருந்தால் எத்தகைய எதிர்வினையைக் கர்நாடக மாநிலம் செய்திருக்கும்? என்பதை அறிவார்ந்த சமூக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகம் தன்னுடைய நிலப்பகுதியைப் பெருமளவில் இழந்தது. அதன் விளைவாகவே, காவிரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்டத் தென்னக நதிநீர் சிக்கல்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. பெருந்தமிழர்கள் ஐயா ம.பொ.சி அவர்களின் முயற்சியால் வடக்கெல்லையும், ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் முயற்சியால் தெற்கெல்லையும் ஓரளவு மீட்டுக் காக்கப்பட்டதென்றாலும், தமிழகம் தனது எல்லைப்பகுதிகளைச் சரிவரத் தற்காக்கத் தவறியதன் விளைவுகளை 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தமிழர்கள் எதிர்கொண்டு வருகிறோம்.

பெருந்தன்மையாலும், பரந்த மனப்பான்மையாலும் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்து நிற்கிற வேளையிலும், தமிழகத்தில் வாழும் பிறமொழி தேசிய இன மக்களை உறவுகளாக எண்ணி ஆரத்தழுவி நேசித்து வரும் தமிழர்களின் இன உணர்வை உரசிப்பார்ப்பது போல நிகழ்ந்தேறும் இனவெறியாட்டங்களும், அத்துமீறல் போக்குகளும் இனியும் தொடர்ந்தால் அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.

ஆகவே, இதுபோன்ற இனவெறிச்செயல்கள் தமிழ் மண்ணில் நடைபெறத் துளியளவும் அனுமதித்திடக் கூடாது எனவும், தாளவாடி மலைப்பகுதியில் தமிழெழுத்துக்களை அழித்த கன்னட அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version