உலகம்
நாயுடன் வாக்கிங் போன பெண், திடீரென காற்றில் கரைந்த மர்மம்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
![nicola - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/nicola.jpg)
நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல சம்பவம் நடந்த தினம் தனது இரண்டு மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு செயின்ட் மைக்கல் சென்ற கிராமத்தில் நாயுடன் வாக்கிங் சென்றார். அவர் தினமும் அந்த பகுதியில் வாக்கிங் செல்வார் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களிடம் செய்த விசாரணையில் இருந்து தெரியவந்தது.
இந்த நிலையில் வாக்கிங் சென்ற நிக்கோலா திடீரென மர்மமான முறையில் மாயமானதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிக்கோலாவை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
நிக்கோலாவின் நாய் மட்டும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது என்றும், நிக்கோலாவின் போன் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அந்த போன் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணை அந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள ஆற்றில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்த காவல்துறையினர் ஆறு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் சில மர்மமான கதைகளை கூறி வதந்திகளை பரப்பியதை அடுத்து காவல்துறை எச்சரித்துள்ளது. நிக்கோலா காணாமல் போய் உள்ளார் என்ற வகையில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.
நிக்கோலாவை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் உள்ளூர் மக்களும் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரை கடைசியாக சந்தித்த ஒரு சிலரை காவல்துறையினர் விசாரித்த போது அவர் சாதாரணமாக தான் இருந்தார் என்றும் நகைச்சுவையாக தன்னிடம் பேசினார் என்றும் கூறியுள்ளனர். அந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக தேடியும் இன்னும் நிக்கோலா கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.