தமிழ்நாடு
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒரு ராணுவ வீரரா? அதிர்ச்சி தகவல்!
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி ஒருவர் ராணுவத்தில் பணியாற்றிய 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் அவருடைய மகன்கள் தனபால், வேணுகோபால் ஆகியோர் சேர்ந்து விவசாயி ஒருவரை தாக்கினர். அந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து வெங்கட்டன் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வெங்கட்டன் மற்றும் அவருடைய மகன் தனபால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேணுகோபால் மட்டும் தலைமறைவானார்.
இந்த நிலையில் வேணுகோபால் எங்கு இருக்கிறார் என்பது கடந்த 25 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீஅபிநயா அவர்களின் தீவிர நடவடிக்கையின் படி வேணுகோபாலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அப்போது சேலம் அருகே குரங்கு சாவடி என்ற பகுதியில் வேணுகோபால் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது கொலை நடந்த அடுத்த மாதமே அவர் ராணுவத்தில் சேர்ந்து விட்டார் என்றும் அங்கு இராணுவத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பணிபுரிந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேலம் அருகே தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி 24 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய தகவல் அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.