இந்தியா
மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டும்: முலாயம் சிங் யாதவால் தேசிய அரசியலில் குழப்பம்!
நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் 16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவால் தேசிய அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், தற்போது அவையில் உள்ள அனைவரும் மீண்டும் வெற்றி பெற்று அவைக்கு வர வேண்டும் என்றார். மேலும் தனக்கு எதிரே அமர்ந்திருந்த பிரதமர் மோடியைப் பார்த்து மீண்டும் மோடியே பிரதமராக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். முலாயம் சிங் யாதவின் இந்த கருத்து அவையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கைகூப்பி நன்றி தெரிவித்து முலாயம் சிங்கின் கருத்துக்குத் தலை வணங்குவதாக கூறினார்.
பாஜகவை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மோடியை வீழ்த்த மாயாவதியுடன் கூட்டணி அமைத்து அகிலேஷ் யாதவ் செயலாற்றிவரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மோடிக்கு ஆதரவாகப் பேசியுள்ளது தேசிய அரசியலில் மட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச அரசியலிலும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.