தமிழ்நாடு
முகிலன் மனைவி பரபரப்பு பேட்டி: அவருக்கு நடந்த பயங்கர சித்ரவதைகள்!
கடந்த 5 மாதங்களாக காணாமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் அதன் பின்னர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றவர் அதன் பின்னர் மாயமாகிவிட்டார்.
இதனையடுத்து முகிலனுக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்? உயிரோடுதான் இருக்கிறாரா என பல சந்தேகங்களுடன் தமிழகத்தில் முகிலனுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தவாறே இருந்தன. இந்நிலையில் அவரை ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து முகிலனிடம் ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரை கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர். கரூர், குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் முகிலனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
வரும் 10ஆம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளாமல் தடுக்கவே திட்டமிட்டு எனது கணவரை கைது செய்துள்ளனர். அவரை கடத்திச் சென்று சித்ரவதைகள் செய்து கொண்டுவந்து விட்டுவிட்டதாகச் சொல்கிறார். இவ்வளவு நாட்களாக எங்கு வைத்திருந்தனர் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. ஓர் இடத்தில் அடைத்து வைத்து பயங்கர மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். அடைத்து வைத்திருந்தவர்களே திருப்பதி ரயில் நிலையத்தில் விட்டுவிட்டிருக்கிறார்கள்.
ஐசியுவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முகிலனின் உடல்நிலை உள்ளது. அவருக்குச் சரியாக சாப்பாடு கூட போடவில்லை. 30 நாட்களாவது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றால்தான் பழைய நிலைக்குத் திரும்புவார். இதனையடுத்து முகிலனை கடத்தியதாக அவர் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
முகிலன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் முன்பிருந்தபோது நடந்த போராட்டங்கள் குறித்து மட்டும்தான் பேசுகிறார். அவர் தெளிவான மனநிலையிலேயே இல்லை. என்னிடம் கூட அவர் சரியாகப் பேசவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முகிலனின் மனைவி பூங்கொடி.