கிரிக்கெட்
தோனியை காட்டமாக விமர்சித்த இளம் வீரர் குல்தீப் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான தோனியை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சற்று காட்டமாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் கூல் என்று புகழப்படும் தோனி சிறந்த ஃபினிஷர், சிறந்த கேப்டன் என பலராலும் பாராட்டப்படுபவர். இவர் வழங்கும் ஆலோசனைகள் களத்தில் உதவியாக இருந்தது என பல வீரர்கள் இதுவரை கூறியுள்ளனர். தற்போதையை கேப்டன் விராட் கோலி கூட இதனை ஒப்புக்கொண்டுள்ளார். தோனியின் ஆலோசனைகள் உதவியாக இருந்ததாக கோலி பலமுறை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் தோனியின் வழிநடத்துதல் திறன் குறித்து இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சற்று காட்டமாக பேசியுள்ளார். இவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற சியாட் கிரிக்கெட் தரவரிசை விருது நிகழ்ச்சியில் பேசிய குல்தீப் யாதவ், தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தவறாகவே முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் பந்துவீசி அது நடக்காமல் போய்விடும். ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னதுபோன்று பந்துவீசினேன், நடக்கவில்லை என்று கேட்கக்கூட முடியாது.
அவர் வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசக்கூட மாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அதிலும் அந்த நேரத்தில் முக்கியமான விஷயத்தை, டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் வந்து பேசுவார் என கூறியுள்ளார்.