இந்தியா
மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: கேரள மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது என்பதும் தெரிந்ததே.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக தினசரி கொரோனா பாதிப்பு இருந்ததால் கேரள மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 30 ஆயிரத்திற்கு குறைவாக சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்று செய்திகள் வெளியானது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு உறங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,196 என்றும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 189 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 239,480 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 40,21,456 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.