தமிழ்நாடு
மாதாந்திர மின் கட்டண கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்தலுக்கு முன் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதும் நேற்று கூட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்று அறிவிப்பு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுவதை அடுத்து, மின் கட்டணம் அதிக அளவில் வருவதாகவும், குறிப்பாக 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தினால் கூட இருமடங்கு மின்சார கட்டணம் வருவதால் மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு என்ற ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதுகுறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது என்பதும் அதற்கான ஆய்வுப் பணிகளும் கடந்த சில நாட்களாக ஆய்வு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனை அடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.