உலகம்
மங்கோலியாவில் கலவரம்.. குற்ற உணர்ச்சியில் பிரதமர் பதவி விலகல்!
மங்கோலியா பிரதமர் குரல்சுக் உக்னா கொரோனா சூழ்நிலையைக் கையாள முடியாத நிலையில் பதவி விலகினார்.
மங்கோலியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே பயணிக்கத் தடை விதிக்கப்பட்டனர், மேலும் நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது.
அந்நாட்டில் எப்போதும் கடும் குளிர் நிலவும். எனவே, வழக்கப்படி குழந்தைப் பிறந்த ஒரு மாதத்தில் தாய்மார்களை குளிரின் தாக்கம் ஏற்படாதவாறு பார்த்து கொள்வர். மேலும் அவர்களுக்கு சூடான உணவே வழங்கப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. அதில் பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன் கொரோனா வார்டுக்கு தனியே நடந்து செல்கிறார்.
அவருக்கு முறையான பாதுகாப்பு உடையும் வழங்கப்பட்டவில்லை. இதனால் அரசை எதிர்த்து மக்கள் பல இடங்களில் போராடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் உக்னா பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து துணை பிரதமர் மற்றும் சுகாதாரத் துறை தலைவர் ஆகியோரும் பதவி விலகினர்.