கிரிக்கெட்
மதத்தின் பெயரால் கிரிக்கெட் விளையாட்டை பாழாக்க வேண்டாமே…- முகமது கைஃப் வேண்டுகோள்!
![Wasim Jaffer - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Wasim-Jaffer.jpg)
மதத்தின் பெயரால் கிரிக்கெட் என்னும் விளையாட்டை யாரும் பாழாக்க வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வாசிம் ஜாஃபர் தற்போது உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தனது சக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஆனால், வாசிம் ஜாஃபர் பணியாற்றிய சங்கத்தின் செயலாளர் ஒருவர் ஜாஃபர் மதம் சார்ந்து செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகவும் வாசிம் ஜாஃபருக்கு ஆதரவும் பல கிரிக்கெட் பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனத். இதுகுறித்து முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், “மதத்தின் பெயரால் ஒரு நாளும் விளையாட்டை பாழாக்காதீர்கள்.சச்சின், கங்குலி, ஜாகிர் கான் என நான் விளையாடும் போது விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருந்தது. ஆனால், நாங்கள் வெவ்வேறு மத நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் கடந்து ஒரு விளையாட்டில் ஒன்று சேர்ந்து தான் விளையாடினோம்.
மதத்துக்காக விளையாடவில்லை. கிரிக்கெட்டுக்காக விளையாடினோம். எங்கள் இந்தியாவுக்காக விளையாடினோம். ஜாஃபருக்கு இது எவ்வளவு கடினமான சூழல் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. அவரவர் நம்பிக்கை அவரவருடையது. மற்றவர்கள் மீது நம் நம்பிக்கையை திணித்தல் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.