இந்தியா
நண்பர் அதானியை காப்பாற்ற நினைக்கும் மோடி? ராகுல் காட்டம்!
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவையும் மோடியையும் நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து பிரதமர் மோடியும் ராகுல் காந்தியை மறைமுகமாக நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது நண்பர் அதானியை காப்பாற்ற நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியின் உரைக்கு பின்னர் நாடாளுமன்றத்துக்கு வெளியே அதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி அதானி குறித்த எனது எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அவரது இந்த உரையில் எனக்கு திருப்தி இல்லை. நான் மிகவும் எளிதான கேள்விகளை தான் கேட்டேன். எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை. பிரதமரின் பயணத்தில் அதானி எத்தனை முறை சென்றார்? எத்தனை முறை அவரை சந்தித்தார்? இவை தான் எனது கேள்விகள்.
அதானி குழுமம் மீது விசாரணை நடத்துவது குறித்து பிரதமர் மோடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே அவரது பார்வையில் அதானி மீது விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதானி தனது நண்பர் இல்லை என்றால் விசாரணை நடத்தப்படும் என்று மோடி கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதுகுறித்து ஒருவார்த்தைக்கூட கூறவில்லை. இதன் மூலம் பிரதமர் மோடி அதானியை காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெளிவாகிறது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்தது. உரிய விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் செய்யவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.