இந்தியா
பிரதமராக இருப்பவர் இதுபோலப் பொய்களைப் பேசக் கூடாது: யஸ்வந்த் சின்ஹா!
பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சுற்றுலா செல்லப் பயன்படுத்தியதாக சில தினங்களுக்கு முன்னர் மோடி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் போபாலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிடம் செய்தியாளர்கள் ராஜீவ் காந்தி மீதான மோடியின் இந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் கடற்படை அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டனர். பிரதமராக இருப்பவர் இதுபோலப் பொய்களைப் பேசக் கூடாது. தன்னுடைய அரசின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக் கூடாது என்றார்.