இந்தியா
மோடி அமைச்சரவையில் உயர் சாதியினரே அதிகம்: இதுதான் உங்கள் சமூகநீதியா?
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் உயர் சாதியினரே அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என கூறினார் பிரதமர் மோடி. ஆனால் அவரது அமைச்சரவையில் பிறபடுத்தப்பட்ட சாதியினரை விட உயர் சாதியினருக்கு தான் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மோடியின் அமைச்சரவையில் உயர் சாதியினர் 32, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 13, பட்டியல் இனத்தவர் 6, பழங்குடியினர் 4, சீக்கியர் 2, இஸ்லாமியர் 1. ஒருவருக்கு ஒரு வாக்கு என சம வாய்ப்பு பேசும் அரசியல் தளத்தில், மக்கள் தொகையில் சுமார் 50-60% உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15% உள்ள உயர் சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்கள் ஆன தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்!), சுமார் 14% உள்ள இஸ்லாமியருக்கு 1 அமைச்சர் என்பதே நிதர்சன உண்மை. அனைவருக்கும் சம வாய்ப்பு எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.