தமிழ்நாடு

திமுக வெற்றிக்கு நாக்கை அறுத்துக்குறதா..?- பெண் தொண்டருக்கு ஸ்டாலினின் ‘கறார்’ அட்வைஸ்

Published

on

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்று வரும் 7 ஆம் தேதி ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் பெண் தொண்டர் ஒருவர், கட்சியின் வெற்றிக்காக தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைப் போன்ற சம்பவத்தைத் தவிர்த்து, “ஏழை – எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள்” என்று ஸ்டாலின் கறார் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும், ‘இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.

வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version