தமிழ்நாடு

கொல்லைப்புற மெஜாரிட்டி; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் ஆவேசம்!

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சபாநாயகர் தனபாலை சந்தித்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூன்று பேர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

இந்த மூன்று பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பலாம் என அரசியல் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அதிமுக ஆட்சி தொடர மத்தியில் உள்ள பாஜக அரசும், ஆளுநரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர்.

பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது. முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால், சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள்.

22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஓ.பன்னீர் செல்வமும் அவருடன் முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு கொல்லைப்புற வழியாக மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version