தமிழ்நாடு
கொரோனா வழக்குகள் ரத்து அறிவிப்பு: போட்டோ பகிர்ந்து முதல்வர் பழனிசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து சில நாட்களுக்கு முன்னரே திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஸ்டாலின் சொன்ன பிறகுதான் முதல்வர் பழனிசாமி செய்கிறார் என்று திமுக தரப்பினர் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் பழையை அறிக்கையையும், முதல்வர் அறிவிப்பையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை மீறி செயல்பட்டவர்கள் மீது அரசு, வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தென்காசி, கடையநல்லூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ‘கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிநில் ஈ பாஸ் பெற்று பயன்படுத்திய வழக்குகள், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவைத் தவிர மற்ற வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறினார்.
இந்நிலையில் ஸ்டாலின், கடந்த மாதம் 22 ஆம் தேதி தான் வெளியிட்ட அறிக்கையையும், முதல்வரின் இன்றைய அறிவிப்பையும் ஒப்பிட்டு படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், ‘கோவில்-19 ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன்.
அலட்சியம் காட்டிய முதல்வர் பழனிசாமி, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர். அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்றுக’ என்று தெரிவித்துள்ளார்.