தமிழ்நாடு
“இன்னும் 3 மாசந்தான் ஆட்சி; அதுக்கு இப்படியொரு அறிவிப்பா பழனிசாமி…”- வம்பிழுக்கும் ஸ்டாலின்
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் விமர்சித்துப் பேசியுள்ளார்.
திருப்பூரில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ஆட்சி முடிய இன்னும் மூன்றே மாதம் தான் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அத்தோடு பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் வானத்தை தொடும் அளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் பழனிசாமி.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கப் போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்து கிழித்தார்? அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை தரப்போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார்? ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானத்தை கீறி வைகுண்டம் காட்டுவேன்’ என்றாராம். அப்படி இருக்கிறது பழனிசாமி அவர்களின் பேச்சு.
2030-ஆம் ஆண்டு தமிழக உற்பத்தித் துறை பங்குகளை 30 சதவிகிதம் ஆக்குவோம் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. மிஸ்டர் பழனிசாமி அவர்களே! 2021 ஆம் ஆண்டு என்ன நிலைமை? அதைச் சொல்லுங்கள்! 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது 19.64 சதவீதம்.
இன்று எடப்பாடி ஆட்சியில் பாதியாக குறைந்துவிட்டது. 9.10 சதவீதம் தான். கழக ஆட்சியில் 2009 – 2010 ஆகிய ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது 28.66 சதவீதமாக இருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.