தமிழ்நாடு
மத்தியில் மோசடி ஆட்சி; மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி: விளாசிய மு.க.ஸ்டாலின்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி தலைமையிலான மத்திய அரசை மோசடி ஆட்சி எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசை கூலிப்படை ஆட்சி எனவும் விளாசி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் மத்திய, மாநில அரசுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது விமர்சனங்களில் மிகவும் காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகளை வசைபாடுகிறார்.
நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்க தவறவில்லை. அப்போது பேசிய ஸ்டாலின், நாம் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு மே மாதம் மத்தியில் நிச்சயமாக மோடி ஆட்சி அகற்றப்பட்டு நாம் விரும்பக்கூடிய புதிய ஆட்சி உருவாகப்போகிறது. திமுகவின் முழு ஆதரவுடனான ஆட்சிதான் மத்தியில் அமையும். சிபிஐ, ரிசர்வ் வங்கி என எல்லாவற்றையும் மோடி அரசு பக்கபலமாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தையே மிரட்டக்கூடிய வகையில் செயல்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு அநியாயத்துக்கு துணை போவதால் தான் நான் சொல்கிறேன், மோடி அரசு ஒரு மோசடி அரசு. மத்தியில் மோசடி ஆட்சி என்றால் மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி, எடுபிடி ஆட்சி, கொலை செய்யக்கூடிய, கொள்ளையடிக்கக்கூடிய ஆட்சி. இவர்களை அகற்ற நீங்கள் தயாராக வேண்டும் என்றார் ஆவேசமாக.