தமிழ்நாடு
ஆளுநர் உரை வெட்கக் கேடானது: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
2019-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பேசி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். ஆனால் தான் பேசி முடித்தபின்னர் அதுகுறித்து விவாதியுங்கள் என்று ஆளுநர் கூற திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்த திமுகவினர் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. கஜா புயல் பாதிப்புக்கு 1500 கோடி கூட மத்திய அரசு வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக அரசு சொல்கிறது, ஆனால் அதை திறக்கச் சொல்லி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு போடுகிறது.
மேகதாட்டு விவகாரத்தில் அழுத்தம் தர முடியாத நிலையில் இந்த அரசாங்கம் உள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்தி மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது. உயர் மின் அழுத்தக் கோபுரங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசக் கூட தயாராக இல்லை இந்த அரசு. குட்கா, வருமான வரி சோதனை என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவில்லை.
முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் போடப்பட்டுவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட அமைச்சரே குற்றம் சாட்டியுள்ள நிலையில், சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரியிருக்கிறோம். இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்யும் ஆளுநர் உரை வெட்கக் கேடானது. அரசு எழுதிக் கொடுத்த பெயிலியர் பேப்பர்களை சட்டமன்றத்தில் ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார். இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.