தமிழ்நாடு
“பன்னீர்செல்வத்தை கம்பி எண்ண வைக்கிறது உறுதி!”- தேனியில் சவால்விட்ட மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-
2001-ம் ஆண்டு, பன்னீர்செல்வம் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல் அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் எனப் பதவி வகித்த ஐந்து வருடங்களில் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இன்றைக்கு பன்னீரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது.
இதை விசாரிக்க வலியுறுத்தித்தான், தி.மு.க சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பது அவர்கள் ஆட்சி. லஞ்ச ஒழிப்புத்துறை அ.தி.மு.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. எனவே, பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். அது நமது அரசு அமைந்தவுடன் நிச்சயமாக நடந்தே தீரும்.
அமெரிக்க நிறுவனமே இவருக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட விவகாரத்தை நாங்கள், ஆளுநரிடம் புகார் மனுவாகக் கொடுத்துள்ளோம்! இந்த ஊழல் முகத்தை மறைப்பதற்காகத் தான் பரதன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பன்னீர்செல்வம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.